வரலாறு:-
பாகல் என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும், பாகற்கொடியைக் குறிக்கிறது. இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி முதலான நிலைத்திணை தாவர வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே என்னும் பண்படுத்தாத செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவிலிருந்து, சீனாவிற்கு 14 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது.
ஊட்டச்சத்து:-
கலோரி - 17
புரத சத்து - 0 கிராம்
நார்ச்சத்து - 2.80 கிராம்
இரும்பு சத்து - 0.43 மில்லி கிராம்
கால்சியம் - 19 மில்லி கிராம்
சோடியம் - 13 மில்லி கிராம்
பொட்டாசியம் - 602 மில்லி கிராம்
சர்க்கரை - 1 கிராம்
வைட்டமின்:-
வைட்டமின் B6, C, A.
நன்மைகள்:-
1. இதனை ஆங்கிலத்தில் Bitter Gourd, Bitter Melon மற்றும் Bitter Squash என்று அழைப்பார்கள். இதன் பொருள் கசப்பான காய் என்பதாகும். ஆங்கிலத்தில் இதன் பெயரை உச்சரிக்கும் பொழுது, இதன் பெயரிலேயே உள்ள கசப்புச் சுவை தான் நினைவுக்கு வரும். இவை வளரும் பகுதியின் தன் மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இவற்றின் நிறம் இருக்கும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. பாகற்காயை ஜூஸ், ஊறுகாய், பொரியல், வறுவல், தொக்கு, குழம்பு, கூட்டு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம்.
சுவாசக் கோளாறுகள்:
பசுமையான பாகற்காய்கள் ஆஸ்துமா, சளி, இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன.
கல்லீரலை வலுப்படுத்துதல்:
தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றினை அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.
நோயெதிர்ப்புச் சக்தி:
பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.
பருக்கள்:
பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால், கண்கூடாகப் பலனைக் காணலாம்.
நீரிழிவு நோய்:
டைப் 2 நீரிழிவு நோயை (type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
மலச்சிக்கல்:
பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், அது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் நீங்குகிறது. சிரமமின்றி மலம் கழிக்க முடிகிறது.
சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை:
ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பேணுவதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது.
இதய நோய்:
பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீக்கப்பட்டு, இதய நோய் எளிதில் வருவதைத் தடுக்கிறது.
புற்றுநோய்:
புற்றுநோய் செல்கள் பல்கிப் பெருகுவதை பாகற்காய் தடுக்கிறது.
எடை குறைதல்:
உடலின் வளர்சி மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.
பக்க விளைவுகள்:-
1. தினமும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும்
2. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் அதிகமாக தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பாகற்காய் கருப்பையின் செயல்பாட்டை அதிகமாக தூண்டுவதால் குறைப்பிரசவத்தை ஏற்படுத்துகிறது.
Tags:
VEGETABLES